Friday, 1 March 2013

விஸ்வரூபம்.......சூப்பரோ சூப்பர்!



எனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு சந்தேகம். கொரிய திரைப்படங்கள் கொரிய திரைப்படமாக இருப்பதால் அதனை உலகதிரைப்படம் என்று கூறுகிறார்கள். ஜப்பானிய திரைப்படம் ஜப்பானிய திரைப்படமாக இருப்பதால் அதனை உலகதிரைப்படம் என்று கூறுகிறார்கள், ஈரானிய திரைப்படம் ஈரானிய திரைப்படமாக இருப்பதால் அதனை உலகதிரைப்படம் என்று கூறுகிறார்கள். .... ஆனால் தமிழ் படம் மட்டும் ஏன் தமிழ் படமாக இல்லாவிட்டால் உலக திரைப்படம் என்று கூறுகிறார்கள்??

நிற்க!!!

சிறுவயதில் நான் கமலின் ரசிகன் கிடையாது. ஒரு முறை தியேட்டரில் குருதிப்புனல் படம் (முதல் முறையாக கமல் படம்..அதற்க்கு முன் வரை, ஆடி வெள்ளி, துர்கா, கரகாட்டக்காரன் போன்ற குடும்ப படங்கள் மட்டும்தான்.) பார்த்தேன். அதிலிருந்து அவரின் தீவிர ரசிகனாகவே இருந்தேன். விருமாண்டி வரை. இன்றும் நான் கமலின் நடிப்புக்கு ரசிகன்தான்.

விஸ்வரூபத்தில் கமல் எதற்க்காக ஆப்கான் தீவிரவாதிகள், அமெரிக்காவை அழிக்கும் திட்டத்தை ஒழிக்கும் இந்திய அதிகாரியாக நடித்தார் என்பது எனக்கு எவ்வளவு யோசித்தாலும் புரியவில்லை. ஒருவேளை உலகதிரைபடம் என்றால் அப்படிதான் இருக்குமோ??

ஒரு படைப்பாளியாக கமல் மீண்டும் தோல்வி அடைந்திருக்கும் படம் விஸ்வரூபம். இனிமேலும் அவர் வெற்றி அடைவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, தவறுகளை திருத்தி கொள்ளாவிட்டால்...!


கமலுக்கும் சிவாஜிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை பற்றி பேசிகொண்டிருக்கும்போது..எப்போதுமே நான் ஒன்று கூறுவது வழக்கம்! சிவாஜியின் எத்தனை படங்களை வேண்டுமானால் பாருங்கள்..பார்த்து விட்டு சிவாஜி உண்மையில் நாத்திகனா, கம்யூனிஸ்ட்-ஆ, தமிழுணர்வு உள்ளவரா இல்லையா, எதையுமே உங்களால் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால் அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் எல்லாம் இன்னொரு படைப்பாளி படைத்த  பாத்திரங்கள். இவர் நடிகர் என்ற வேலையை மட்டுமே பார்த்தார். ஆனால் கமலின் எந்த சமீபத்திய படங்களை பார்த்தாலும் கமலின் உண்மை நிலை/எண்ணம் என்ன என்பதை யாரும் சொல்லிவிடலாம். நாத்திகன், கம்யூனிஸ்ட், தமிழ் பற்று..எல்லாம்! இது எனக்கு கமலின் தோல்வியாகவே படுகிறது. இழப்பு அவருக்கு மட்டும் அல்ல, ஒரு மிகச்சிறந்த நடிகரை ஒரு சார்பு (monotonic) வேடம் மட்டும் அணிந்து நடிப்பதால் தமிழ் சினிமாவிற்கும் தான்.

கொஞ்சம் யோசித்து பாருங்களேன்! மும்பையில், தவறான தொழில் செய்யும் தாய்க்கு பிறந்த, மனநிலை தவறிய ஒருவன் அபிராமி அந்தாதி பாடிக்கொண்டு திரிவதன் காரணம் என்ன? அது கமலின் விருப்பம். அந்த பாத்திரத்திற்கு அது தேவையா, பொருந்துமா என்பதை எல்லாம் அவர் யோசிப்பதே இல்லை. ஒரு சின்ன வசனம்  வைத்துவிட்டு அவருக்கு பிடித்ததை எந்த பாத்திரமும் செய்யும்படி மாற்றுவது, என்னை பொறுத்தவரை அவரின் திறமையை வேண்டுமானால் காட்டலாம், ஆனால் ஒட்டுமொத்த படமாக பார்கையில் அந்த விஷயம் துருத்தி கொண்டேதான் இருக்கும்.

சிங்கப்பூரில் வேலை பார்த்து ஊர் திரும்பிய ஒரு சண்டியர் நேதாஜி பற்றியும் உயர்வாகவும் , கிரிக்கெட் பைத்தியமாக இருக்கும் மனிதர்களையும் கிண்டல் செய்வதின் மூலம் நான் திரையில் பார்த்தது விருமாண்டியை அல்ல. கமலைதான். அதுதான் அவரின் பலவீனம்.

மறுபடியும் நிற்க!!!

முன்னுரை போதும் என்று நினைக்கிறேன், விஸ்வரூபம் படத்திற்கு வருவோம். சிங்கப்பூரில் சிறுவர்/சிறுமியரை அனுமதிக்கவில்லை. ஆகவே மனைவியையும், பாரதியையும் வீட்டில் விட்டு படத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை. அவர்களின் சாபம்தான் படம் அப்படி இருந்ததற்கு காரணமோ என்று சந்தேகமாக இருக்கிறது J.


படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள் பொக்கிஷம், கமல் ரசிகர்களுக்கு. அந்த நடனமும், பெண்மையின் நளினம் கூடிய பேசும் பாவனையும்..அற்புதம்! (வரலா(ற்)று உணர்வு தலைக்குள் உள்ளவர்கள் குறைந்த பட்சம் அந்த பாட்டை மட்டுமாவது பாருங்கள். ஒற்றை நடன அசைவை --அதுவும் என்ன முத்திரையோ?-- ஐந்து காமராவில் படம் பிடித்து அதை சுற்றி சுற்றி முழுப்பாட்டுக்கும் காட்டும் பிழைப்பை கமல் செய்யவில்லை. அட டான்ஸ் வேண்டாம் அது (மட்டும்தான்) இன்னொருத்தருக்கு வரும்..குறைந்தபட்சம் நடிப்பு..?. (கெட்ட வார்தையோ?) ..அட ஒரு அசைவு..? என்னமோ போங்கப்பா!!)

அமெரிக்காவில் வசிக்கும் நடன ஆசிரியர் கமல்.ஆண்ட்ரியா அவரிடம் நடனம் கற்று கொள்கிறார். கமலின் மனைவி, கமலை பிடிக்காமல் இன்னொருவரை நேசிக்கிறார். விவாகரத்திற்கு காரணம் வேண்டும் அல்லவா? ஆகையால் கமலை பின்தொடர்ந்து அவருக்கு ஏதாவது தொடர்பு இருந்தால் அதை வைத்து விவாகரத்து செய்யலாம் என்று ஒரு அப்புராணியை அனுப்புகிறார். அந்த அப்புராணி கமலை பின்தொடர்ந்து, பின்தொடர்ந்து தவறுதலாக தீவிரவாதிகளின் ரகசிய இடத்திற்கு சென்று விடுகிறார் (இதுதான் ரொம்ப முக்கியமான கட்டம்..அவர் அங்கு தவறுதலாக செல்ல வில்லை என்றால், கமல் நடனம் கற்றுக்கொடுத்து மட்டுமே இருந்திருப்பார்! நாமும் சலங்கைஒலி போன்ற ஒரு அனுபவத்தை பெற்று இருக்கலாம்..என்ன செய்வது?..பிரியா, மற்றும் பாரதியின் சாபம் சும்மா விடுமா?..)

தீவிரவாதிகள் அவரை கொன்று, கமலையும் அவர் மனைவியையும் கடத்தி கொண்டு வருகிறார்கள் (எதுக்கா?..கமல் பேரை தெரிஞ்சிக்கத்தான்)..! கமலும் ஒரு மூன்று நான்கு பெயர் சொல்கிறார்! எதுவுமே அவர்களுக்கு பிடிக்கவில்லை! திடீரென்று கமல் ஆக்ரோஷமாகி, அங்கு இருந்த அனைத்து (அய் அஸ்க்கு புஸ்க்கு படத்தை பத்து நிமிஷத்தில முடிச்சிரலாம்னு பார்கிறீங்களா?) ..தரைதளத்தில் இருந்த அனைத்து வில்லன்களையும் அடித்து துவம்சம் செய்து தப்பிக்கிறார். (எதுக்கு தப்பிக்கிறார்..மீதி இருப்பவர்களையும் சும்மா கும்தலக்கடினு குத்தலாம் இல்ல?...அட போங்க பாஸ்..அவரு இன்னொரு பார்ட் வேற எடுத்து வச்சிருக்காரு..நீங்க படத்தை சீக்கிரம் முடிகிறதில மட்டும் அக்கறை காட்டுங்க!)

அப்போதுதான் ஒரு உண்மை எல்லோருக்கும் தெரிகிறது! கமல் ஒரு இந்திய உளவு துறை அதிகாரி, அவர் அமெரிக்காவை நாசம் செய்ய முயற்சி செய்யும் ஆப்கான் தீவிரவாதிகளை அழிக்க நடன ஆசிரியராக அமெரிக்காவில் நடமாடி கொண்டு இருக்கிறார் (எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...! இந்தியாவில சம்பளம் வாங்கிற ஒருத்தர் அமெரிக்காவை எதுக்கு காப்பத்தனும்?. ஒரு வேலை ரெண்டாவது பார்ட்டில் அதுக்கு பதில் இருக்குமோ?).

தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக கமலும் அவரின் உயரதிகாரியும் (அந்த நிமிஷம் வரை அவர் கமலின் மாமா) அவசரமாக வீட்டை காலி செய்து கொண்டு கிளம்ப பார்கிறார்கள்! அந்த நேரம் பார்த்தால் கமலின் மனைவி அந்த அவசரத்திலும் துணிமணியை எடுத்து வைத்து கொண்டு இருக்கிறார்! அதை பார்த்து அந்த மாமா அலைஸ் உயரதிகாரி சீக்கிரம் கிளம்பு இதற்க்கெல்லாம் நேரம் இல்லை என்று கூறுகிறார். தியேட்டரில் எல்லோரும் சிரித்தார்கள் (அய்யோ..அய்யோ..அப்படி ஒரு அப்பாவி பொண்ணா?..)
அடுத்த நிமிடத்தில் கமல் மாடியில் இருந்து முடியை ஓட்ட வெட்டிக்கொண்டு வீறுநடை (ஸ்லோ மோஷன்) போட்டு படியில் இறங்கி வருகிறார்!.(அட இந்த முடிவெட்ட மட்டும் எப்படி நேரம் இருந்தது?..ஆனா என்னைத்தவிர ஒரு பய தியேட்டரில் சிரிக்கவில்லை.ஆணாதிக்கம் ஒழிக!!! )

அந்த நேரத்தில் ஒரு பிளாஷ்பேக்..! கமல் ஆப்கானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கிறார். மிக தீவிரமாகவே பயிற்சி கொடுக்கிறார் (எதுக்கா?..அப்பதான அவுங்கள கிளைமாக்ஸ்-ல அழிக்க முடியும்..) அப்புறம் ஒரு காட்சியில் அவர் இந்தியாவின் ஒற்றன் என்பதை ரகசியமாக அங்கு இருந்த கமலின் உதவியாளர் மூலம் நமக்கு உணர்த்துகிறார். அந்த உதவியாளரும் ரா தான் போல..அப்போ அவரும் ஹீரோ தானே?...மூச்..கமல் படத்தில இன்னொரு ஹீரோவா?.பாவம் ரெண்டு சீன் மூணு டயலாக் பேசிட்டு காணாம போயிடுறாரு!,

அதை விட உச்சகட்டமா..அந்த முகாமில் ஒசாமா பின் லேடனை கமல் பார்பார்.. (லேடன் தெரியுமா? பின்.. லேடன்!!!). இதையெல்லாம் விஜயகாந்த் பண்ணி இருந்தா...கொள்ளை பயக சிரிச்சிருப்பாங்க!..கமல் ஆச்சே..உலக நாயகன் ஆச்சே..அவர் ரெண்டு படத்துக்கு முன்னாடி புஷ் கூடவே சாரி புஷ்ஷாவே நடிச்சாரே..ஒசாமா புஷ்ஷை விட பெரிய ஆளா என்ன?..!
சரி அப்புறம் எப்போதான் அமெரிக்கா போனாரு?..(அவன் அவனுக்கு விசா கிடைக்கிறதுக்கு உள்ள நாக்கு வெளிய தள்ளிருது! இவரு எங்க நினைச்சாலும் போறாருபா!..)
அங்கதான் ட்விஸ்ட்! அவரு ஆப்கானில் தீவிரவாதிகள் கூட இருந்தது அவுங்களுக்கு சொல்லி கொடுக்க இல்லையாம்..அவுங்க என்ன பண்றாங்க அப்படின்னு தெரிஞ்சிட்டு அமெரிக்காவை காப்பத்துவதுக்காம்!(இதோ பார்ரா!!)

தீவிரவாதிகள் புறா காலில் அணு கதிர்வீச்சை உமிழும் ஒரு பொருளை கட்டிவிட்டு அமெரிகாவினுள் அனுப்புகிறார்கள்.! ஆகவே அனைத்து சென்சார்களும் செயலிழக்கின்றன! அந்த நேரத்தில் ஒரு அணுகுண்டை செல்போன் மூலம் வில்லன் வெடிக்க வைக்க பார்க்கிறார். வழக்கமான பழைய படமாக இருந்தால் ஏதாவது ஒரு வயரை பிடித்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ஹீரோ வயரை கட் செய்வார்..பாம் செயல் இழக்கும். ஆனால் நம்ம உலக நாயகன்தான் வழக்கமான ஆள் கிடையாதே! வானத்தை பார்க்கிறார்! அதுவரைக்கும் அமைதியா இருந்த அவர் மனைவி, மைக்ரோவேவ் ஓவனை அந்த செல்போன் மீது கவிழ்த்து வைக்கிறார்! வில்லன் போன் செய்து பார்த்துவிட்டு, இந்த எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்று பதில் வந்ததும்..விமானத்தில் பறந்து செல்கிறார். சுபம்!
படம் முழுவதும் ஆண்ட்ரியா இருந்தார். ஆனால் அவர் யார் என்று யாருமே சொல்லவில்லை (ஆண்ட்ரியாதான்...என்ற மொக்கை ஜோக்-எல்லாம் வேண்டாம்).

வீட்டிற்கு வந்தேன். படம் எப்படி இருந்தது என்றாள் ப்ரியா. முதல் பத்து நிமிஷம் சூப்பரா இருந்துச்சி!. என்றேன். அந்த பத்து நிமிஷத்துக்கா பதினெட்டு டாலர்?. என்றாள். அவசரமாக மறுத்தேன்.. இல்ல இல்ல..பத்து நிமிஷம் சூப்பர். மீதியெல்லாம் சூப்பரோ சூப்பர்!

இந்த ப்ளாக் அடிக்கடி என் மனைவி படிக்கமாட்டாள் என்ற நம்பிக்கையில்,

காளிராஜ்!

Sunday, 3 February 2013

விஸ்வரூபம்!

என்னுடைய முதல் சினிமா பற்றிய கட்டுரைக்கு பல்வேறு கற்பனைகள் (யாரை பற்றி, எதை பற்றி என்று பற்பல) செய்து வைத்திருந்தேன். இதுவாக இருக்க வேண்டும் என்று என் கனவிலும் நினைக்கவில்லை. இரண்டு மூன்று நாட்களாக தூக்கத்திலும் இதை பற்றிய நினைவுதான். ஒரு மாதிரியான நிம்மதியின்மை!

என் பிறந்த ஊரிலோ, நான் வளர்ந்த இடத்திலோ நான் இஸ்லாமியர்களுடன் நெருங்கி  பழகும் வாய்ப்பு பெரும்பாலும் இல்லாதவன். குறிப்பாக சொல்வதானால் இரண்டு நண்பர்கள் மட்டும்தான். ஒருவன் சபீர். என்னுடன் கல்லூரியில் படித்தவன். மற்றொருவன் ரஹ்மான். நான் முன்பு இருந்த அலுவலகத்தில் என்னுடன் பணி புரிந்தவன். எவ்வளவு யோசித்தாலும் வேறு நபர்களை பெயர் ஞாபகத்தில் இல்லை.

சபீர், நாங்கள் படிக்கும்போது எங்கள் வகுப்பில் மாணவர் தலைவனாக இருந்தான். சொல்வதற்கு எந்த வெட்கமும் இல்லை, அப்பொழுதெல்லாம் நான் ஒரு வகையான இந்துத்வாவாதி. என்ன காரணம் என்று தெரியவில்லை...சபீருடன் பழக எனக்கு எந்த தடையும் இல்லை. ஆனாலும் நான் மதத்தில்...மதத்தில் என்பதை விட..மத அரசியலில் தீவிரமாகவே இருந்தேன். சபீரிடம் எங்கள் வயதிற்கு மீறிய ஆளுமை திறன் இருந்தது. எங்கள் வகுப்பில் நாங்கள் பல சிறு குழுக்களாகவே இருந்தோம். சிற்சில சண்டைகளும், ஒரு பெரிய சண்டையும் கூட உண்டு. ஆனால் சபீர் எங்கள் எல்லோருக்கும் பொதுவான ஒருவனாக இருந்தான். கடைசி வரை. சபீர் சொன்ன கேட்க மாட்டான் என்று ஒருவன் கூட என் வகுப்பில் அப்போது இல்லை. இப்போது கூட எனக்கு ஆச்சர்யம் தரும் விசயம்தான். சபீருக்கு கோபம் வந்து நான் பார்த்ததே இல்லை. அவனுடைய அதிக பட்ச கெட்ட வார்த்தை 'லூசு' என்பது மட்டும்தான். நானும், சிவாவும், இசக்கியும் (அப்புறம் கிரி என்ற இந்த விசயத்தில் என் மாணவனாகும் வரம் பெற்றவன்...:) ) பேசும் வார்த்தைகளுக்கு முன்னால் அந்த லூசு என்ற வார்த்தை பெரிய வாழ்த்துரையாக இருந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

ஒரு முறை டூர் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தான். எல்லோரையும் அழைத்து செல்ல நிறையவே மெனகட்டான். நானும் சிவாவும் வரமுடியாது என்று சொல்லிவிட்டோம். நிறைய சுற்று பேச்சு வார்த்தை நடத்தினான். ஒன்றும் முடியவில்லை. ஒரு நாள் நான் தனியாக இருக்கும்போது, பேசி பார்த்தான். நான் முடியாது என்றே சொல்லி கொண்டிருந்தேன். கடைசியில், இன்னொரு முறை நான் டூர் ஏற்பாடு செய்தான் என்னை செருப்பால் அடிங்கடா என்று அவனுக்கு உரிய உச்சகட்ட கோபத்தில் கூறினான். அப்போதுதான் உள்ளே நுழைந்த சிவா, சீரியஸாக, "காளி இந்த டூர் போகும்போது அதை வாங்கிட்டு வர சொல்லி சபீர் கிட்ட சொல்லிட்டியா?" என்றான். சபீர், "எதைடா?". "ம்ம்..அதான் சொன்னியே, செருப்பு"..எல்லோரும் சிரித்து கொண்டே இருந்தோம்.

சபீர் எனக்கு ஆதர்ஷம், எப்போதுமே...மனிதர்களை சம்பாதிப்பதில்.

 என்னை அவன் இந்த நாள் வரை பாதித்து கொண்டிருப்பதற்கு காரணமான நிகழ்ச்சி வேறொரு நாளில் நடந்தது. முந்தின நாள் டிவியில் சின்னத்தாயி என்ற படம் வந்திருந்தது. சபீர் ஒரு வகையான உணர்ச்சிவயப் பட்ட நினையிலேயே அன்று முழுவதும் இருந்தான்.கோட்டையை விட்டு என்ற பாடல் அவனுக்குள் திரும்ப திரும்ப ரீங்காரமிட்டு கொண்டிருப்பதை அவன் பேசும்போது என்னால் உணர முடிந்தது. "அந்த பாட்டு என்னோமோ பண்ணுதுலே!. எங்க ஊருல எடுத்த படமுல்ல..!". பொதுவாகவே என் பார்வையில்,திருநெல்வேலி காரர்கள் மற்ற எந்த ஊர் காரர்களை விடவும் ஊரோடு பிணைக்க பட்டவர்கள்.தாமிரபரணி தண்ணீர் குடித்தவன் என்பதை கூட பெருமையோடு சொல்வார்கள். அதற்கு முந்திய என் நினைவு முழுதும் இஸ்லாம் இனத்தோர் இந்த எண்ணம் எல்லாம் இல்லாதவர்கள் என்பதாகவே இருந்தது. சபீர்தான் முதலில் அதை உடைத்து போட்டவன். இஸ்லாம் வேண்டுமானால் இருநூறு அல்லது முன்னூறு ஆண்டுகளுக்கு முன் அவர்கள் தேர்ந்தெடுத்த மார்கமாக இருக்கலாம். ஆனால் சபீரின் முன்னோர்களும், என்னுடைய முன்னோர்களும் எப்படி இருந்திருப்பார்கள். என்ன வகையான உறவு அவர்களுக்குள் இருந்திருக்கும்?. கற்பனை விரிந்து கொண்டே சென்றதில்,  நான் அதுவரை நினைத்திருந்த விசயத்தின் நேர் எதிரில் நின்று கொண்டிருந்தேன். சபீரின் முன்னோர்களும் என் முன்னோர்களும் உறவினர்களாக இருந்திருக்க கூடிய வாய்ப்பு என்னை மிகவும் பாதித்தது!

இப்போது யோசிக்கையில், அவனுடைய நம்பிக்கையின் படி அவன் ஆதாமின் வாரிசாக இருந்தால், நானும் அப்படிதானே?. என்னுடைய புரிதல் படி, குரங்கிலிருந்து என்றால்  அவனும்தானே தானே?. அப்போது மார்க்கம் என்பது கல்லூரியில் நாம் எடுத்த பாடபிரிவு போலத்தானா?.

சபீரை கல்லூரிக்கு பிறகு நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். இந்த பத்து வருடங்களில் அவ்வளவுதான். அவன் நான் அதன் பிறகு பார்க்கும் ஒவ்வொரு முஸ்லிமிலும் அவன் இருந்தான். சபீர் இப்போ இந்த மாதிரி தாடி வைத்திருப்பானா?. என்பது போன்ற எண்ணங்கள் எந்த முஸ்லிமை பார்த்தாலும். ஆம்! எனக்கு சபீர்தான் அளவுகோல் எந்த இஸ்லாமியரையும் அளப்பதற்கு.

கல்லூரிக்கும் பிறகு நான் அடைந்த பரிமாண மாற்றங்கள் எதுவும் சபீருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு நான் எப்போதும் நெற்றியில் பட்டை போட்டுகொண்டு பரீட்சை எழுத வரும் காளியாகவே இன்னும் தோன்றி கொண்டு இருக்கலாம். அந்த நேரத்திலேயே சபீர் எனக்கு நெருக்கமானவன் என்றால், இப்போது அது பன்மடங்கு கூடி உள்ளது!


இந்த கட்டுரை எழுத காரணம்..நான் செய்த ஒரு சிறிய தவறு. விஸ்வரூபம் பிரச்சனையில் ஆரம்பம் முதலே எனக்கு அரசின் மீதுதான் விமர்சனம். எனக்கு தெரிந்த நண்பர்களிடமும் நான் அதையே சொல்லி வந்தேன். போராடுவது ஜனநாயக உரிமை. படத்தை தடை செய்யும் முன், சமரசத்தில் ஈடு பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. ஒவ்வொரு படத்திற்கும் இப்படி செய்ய முடியுமா? என்றால்..ஆம்! சட்டம் ஒழுங்கு கெடும் என்று ஒவ்வொரு படத்திற்கும் தடை விதிக்க முடியும் என்றால் இதுவும் முடியும்.

நான் செய்த தவறையும் கூறிவிடுகிறேன். இஸ்லாமியர்களின் தரப்பில் வைக்கப்படும் வாதங்களை தெரிந்து கொள்ள தேடி கொண்டிருந்த போது..ஜைனுலாப்தீன் என்பவரின் மேடை பேச்சை பார்க்கும் மோசமான தருணம் வந்தது. எனக்கு அவர் எவ்வளவு தூரம் செல்வாக்கு மிக்கவர் என்பதெல்லாம் இப்பவும் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்ப வில்லை. என்னுடைய பதினாறாம் வயதில் எங்கள் ஊரில் சண்முகையா பாண்டியன் என்று ஒருவர் பேசுவார். அவர் பேச்சு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதோ அதே பாதிப்புதான் இன்றும் ஏற்பட்டது. அந்த வீடியோவை பார்த்துவிட்டு இரு நாட்களாக என் மனைவிடம் புலம்பி கொண்டே இருந்தேன்!

ஜைனுலாப்தீன் பேசிய பேச்சில் எனக்கு தட்டுபட்ட சில நியாயமான விசயங்களும் அதற்க்கான என்னுடைய புரிதல்களும் முதலில்..

1. இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவிலும் இஸ்லாமியர்களை உள்ளது உள்ளபடி காட்டியதே இல்லை. சாம்பிராணி புகை போடுகிறவர், நிம்மல்கிட்ட, நம்மல்கிட்ட என்று தவறாக தமிழ் பேசுபவர், மீசை இல்லாமல் தாடி வைத்திருப்பவர், இப்போதெல்லாம் தீவிரவாதி.. இப்படி மட்டுமே இஸ்லாமிய சமூகம் தமிழ் சினிமாவில் சித்தரிக்கபடுகிறது! ஜைனுலாப்தீன் எம்.ஜி.ஆர் முதல் வடிவேலு வரை எல்லோரையும் குறிப்பிட்டு சொல்லி இருப்பார்.

என்னை பொறுத்தவரை இது மிக நியாயமான ஆதங்கம். விஸ்வரூபம் தடைக்காக கமலுக்கு ஆதரவாக திரண்டு வந்த திரை உலகமும் அதன் படைப்பாளிகளும் வெட்கப்படவேண்டிய செய்தி இது. ஒரு சமூகத்தை பற்றி அந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல், பொத்தாம் பொதுவில் சித்தரிப்பதால் அவர்கள் படும் வேதனை பற்றி கொஞ்சமும் கவலைபடாத படைப்பாளிகள் இதற்காக வருத்த பட்டே ஆகவேண்டும். அதில் முற்போக்கு, நல்ல சினிமா பற்றி பேசும் அனைவரும் அடக்கம்.

ஜைனுலாப்தீன் மற்றும் அவர் போல சிந்திக்கும் மற்ற தோழர்களுக்கு என் பதில்: இவ்வகையான கேவலமான சித்தரிப்புக்கு காரணம் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு என்ற புரிதலில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது தமிழ் சினிமாவின் சாபகேட்டில் ஒன்று என்பதே என் எண்ணம். காலகாலமாக தமிழ் சினிமா இப்படிப்பட்ட கற்பிதங்கள் மீதே கட்டமைக்க பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்களை, காவல்துறையினரை, பிராமணரை, பெண்களை, திருநங்கைகளை..எல்லோரையும் தமிழ் சினிமா இப்படிதான் சித்தரித்து வந்துள்ளது. நேர்மையான சினிமா என்பதில் ஆர்வம் இல்லாத படைப்பாளிகளால் வந்த பிரச்சனை இது. இது சினிமாவை நேசிக்க கூடிய, நல்ல சினிமா வர வேண்டும் என்று நினைக்க கூடிய அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய விஷயம் இது. மதத்தின் பெயரால் உங்களை தனிமை படுத்தி கொண்டு போராட வேண்டிய அவசியம் இல்லை. நல்ல சினிமாவை ஒரு இயக்கமாக கொண்டு செல்லும் திறன் படைத்தோருடன் கைகோர்த்து செய்ய வேண்டிய காரியம் இது என்பதே என் உறுதியான கருத்து.

மற்றபடி, எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ, கமலோ, ரஜினியோ, உங்களை கீழ்மைப் படுத்த வேண்டும் என்பதற்காக செய்யும் வேலை அல்ல இது. தமிழ் சினிமா அத்தகைய கீழ் எண்ணம் படைத்தவர் வசம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

2.கருத்து சுதந்திரம் என்ற வார்த்தையை உபயோகபடுத்தும் தகுதி, பாபா படபெட்டியை தூக்கி கொண்டு ஓடிய ராமதாஸ் வழிவந்தவர்கள், குமுதம் பத்திரிகையை எதிர்த்த பாரதிராஜா, வாட்டர் படத்தை எதிர்த்த சங்பரிவார், டேம் படத்தை தடுத்த 'முற்போக்கு' தமிழ் சமூகத்திற்கு இல்லை.

என் பதில்: அவர்களுக்கு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் இவையெல்லாம் தவறு என்று சொல்லிய .. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நடுநிலையாளர்கள் பலர் எல்லா இடத்திலும் உண்டு. அவர்களுக்கு உண்டு இல்லையா?. அவர்களுக்கு உங்கள் பதில்? அவர்கள் எல்லோரும் செய்தார்கள் ஆகவே நாங்களும் செய்வோம் என்பது நல்ல பதிலாக எனக்கு படவில்லை. என்னை பொறுத்தவரை கருத்து சுதந்திரம் என்பது..இவைகளை பற்றி கூறக்கூடாது என்பது போன்ற கட்டுபாடுகளை உடையது அல்ல. பெருவாரியான மக்கள் சமூகத்தில் எந்த கருத்துகளையும் முன் வைக்கலாம். அவற்றின் ஏற்று கொள்வதும் கொள்ளாமல் இருப்பதும்..அவரவர் விருப்பம். எதிர்பதற்க்கும் கருத்து சுதந்திரம் உடைய சமூகத்தை நோக்கியே நம் பயணம் இருக்கவேண்டும். சொல்லவே கூடாது என்பதற்க்கான போராட்டம் நாளை எந்த வகையான சமூக போராட்டத்தையும் அழித்து விடும்.

3. பாரதிராஜாவின் "தீவிரவாதத்திற்கு எதிரான படத்தை எதிர்த்து தங்களை தீவிரவாதியாக காட்டிக்கொள்ள வேண்டாம்". என்ற வேண்டுகோளின் தொனி.

இது கண்டிப்புக்கு உரியது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. வழக்கம்போல் மூளை கொண்டு சிந்திகாமல் உளறி இருக்கிறார். சிறு பொறுப்புணர்வும் இல்லாமல் பேசியிருக்கிறார். அவர் படம் பார்த்துவிட்டு அப்படி சொன்னாரா என்பது கூட எனக்கு தெரியவில்லை. நேர்மையான நோக்கத்துடன்  படம் எடுத்த யாரையும் நான் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்தது இல்லை. விஸ்வரூபம் படத்திற்கு நான் அல்லது என் போன்றோர் ஆதரவு தருவது அவர் அப்படி எல்லாம் சொல்லி இருக்க மாட்டார் என்ற அபத்தமான நம்பிக்கையின் பேரில் அல்ல. அப்படி கூறி இருந்தாலும் அதுவும் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதியே, என்பதும்..அதற்க்கு எதிராக நாம் ஜனநாயக ரீதியில் எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுதான் என் நிலை.


இதைதவிர எனக்கு அந்த பேச்சுக்களில் வேறு நியாயங்கள் இருந்ததாக படவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் எனக்கு கவலை ஏற்படுத்தும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். ஒட்டுமொத்த இந்திய அல்லது தமிழ் சமூகமும் இஸ்லாமிய சமூகத்திற்கு நேர் எதிரில் இருப்பது போன்ற ஒரு நிலையை ஜைனுலாப்தீன் நிறுவ முயற்சித்திருப்பது என்னை மிகவும் கவலையுற செய்கிறது. நம் சமூகம் அப்படிப்பட்டது அல்ல நண்பர்களே! ஒரே ஒரு கேள்வியை மட்டும் அந்த எண்ணம் உடையவர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொண்டால் அது விளங்கும்.

பெரியார்..எல்லோருக்கும் நாத்திகவாதியாக அறிமுகமான அவர்..! பெருவாரியான மக்கள் ஏற்றுகொண்ட கடவுள் சிலையை தன் பக்கத்தில் இருத்தி கொண்டு..அதை செருப்பால் அடித்து கொண்டு சைக்கிள் ரிக்சாவில் ஈரோட்டை சுற்றி வரும் தைரியம் படைத்த அவர்..தன வாழ்நாளில் ஒரு முறை கூட..சிறுபான்மையினரின் தெய்வத்தை பற்றியோ, அவர்கள் வழிபாட்டை பற்றியோ..ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. இதே நிலையை நான் மதிக்கும் பல கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் ஏற்று கொண்டே வந்துள்ளனர். இது ஏன் என்று சிறிது யோசித்தால் நம் சமூகம் எப்படிப்பட்ட சமூகம் என்று விளங்கும்.பெரியாருக்கு..இந்து கடவுள் மேல் மட்டும் அல்ல..எந்த கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லை. ஆனாலும் அவர் அதை பற்றி விமர்சிக்காதற்க்கு காரணம் பயம் அல்ல...கண்ணியம்! அந்த கண்ணியத்தோடு அவர் வழியும், கம்யூனிஸ்ட் தோழர்கள் வழியும் வந்த கோடானுகோடி இந்துக்கள் உள்ள தேசம் இது. மோடி வழிவந்தவர்களுக்கு மட்டும் உண்டான தேசம் அல்ல இது!

பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் அழுத..புலம்பின கோடானுகோடி மக்கள் உள்ள தேசம் இது! காந்தியை சுட்டவர்கள் மட்டும் உள்ள தேசம் அல்ல இது..!

மோடிக்கு மட்டுமல்ல..காயிதே மில்லதுக்கு ஓட்டளித்த சமூகமும் இதுதான்.

இன்றும் இது மாறிவிட்டாதாக எனக்கு படவில்லை.

உண்மையை சொல்லப்போனால்..பல்வேறு தளங்களில், பல்வேறு சூழ்நிலைகளில்..இஸ்லாமியர் மட்டுமல்ல..எல்லா மதத்தினரின் வழிபாட்டு உரிமைக்கும்..அவர்களை வாழ்வுரிமைக்கும் போராடிய கோடானுகோடி நடுநிலையாளர்களின் முகத்தில் கரிபூசி இருக்கிறது இந்த விஸ்வரூபம் விஷயம்."இப்போ என்னங்கடா சொல்றீங்க!" என்ற பாசிச ஓநாய்களின் கேள்விகளுக்கு எங்களை போன்றோரால் பதிலளிக்க முடியாத நிலை இதனால் ஏற்பட்டு இருக்கிறது!

 இவ்வளவு பதில்களும் ஜைனுலாப்தீன் மற்றும் அவர் பேச்சிற்க்கு கைதட்டிய ஒரு சிறு கூட்டத்திற்கும் மட்டுமே தவிர எல்லா தோழர்களுக்கும் கிடையாது! ஆனால் எப்படி..சண்முகையா பாண்டியன் காணாமல் போனாரோ..அப்படியே இவரும் காணாமல் போவது சமூகத்திற்கு நல்லது! அம்மையாரின் அரசியலில் சிக்கிய அல்லது சிக்கவைக்க முயற்சிக்கும் கூட்டத்தினருடன் நாம் கவனமாகவே இருக்க வேண்டியுள்ளது. என் போன்றோர் எதிர்க்கும் இந்துத்வா அரசியலுக்கும், இதற்கும் பெரிய வித்யாசம் இல்லை..!

எப்படி இந்துக்களில்..நான் குறிப்பிட்டது போல சங்கபரிவார் இல்லாத மக்கள் உள்ளனரோ..அப்படியே இஸ்லாமியர்களிலும் இருக்கிறது என்ற நிலையை நாம் எடுத்துக்காட்டியே ஆகவேண்டும்! அல்லது நம் பொதுமன புத்தி..அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதிகளாக்கி..அவர்களை வெறுக்கும் நிலையை மிக எளிதாக கொண்டுவந்து விடும். அரசியல் சார்பற்ற..இஸ்லாமியர் அமைப்புகளை நிறுவியாக வேண்டிய கட்டாயம் இப்போது அனைவருக்கும் உள்ளது!

சபீர் எனக்கு எப்படியோ அப்படிதான்..எனக்கு நம் ஊரில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும். பக்கத்து மாநிலத்தில் உள்ள இந்துக்களை காட்டிலும், தமிழ் இஸ்லாமியர்கள் மொழியால், முன்னோர்களால் எனக்கு நெருக்கமானவர்கள். ஜெனெடிக் சோதனை செய்தாலும் இந்த உண்மையே சான்றாகும்! நான் எப்படி எல்லா இஸ்லாமியர்களின் ஊடாகவும் என்னுடைய சபீரை தேடுகிறேனோ..அப்படியே..சபீரும் மற்றோர்களும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன்!ஸ்ருதி அப்பாவுடன் இணைந்து நடிக்க வேண்டும்...என்பதை அபத்தமாக புரிந்து கொண்டு ஜைனுலாப்தீன் சொன்னது போன்ற வெறுப்பின் ஊடாகவும்  அல்ல...பாரதிராஜாவின் உடன்பிறந்த சகோதிரிகள், அவரின் மனைவி ஆகியோரின் பத்தினித்தனம் குறித்த ஆராய்ச்சி வழியாகவும் இல்லை. மக்களிடம் அழகானதையே பேசுங்கள் என்ற வாசகம் எல்லோருக்குமானது.

நாம் என்ன செய்திருக்கலாம்??..

விஸ்வரூபம் படத்திற்கு எதிராக போராடி இருக்கலாம்..நாம் எல்லோரும் இணைந்தே! ஜனநாயக ரீதியாக நம் எதிர்ப்பை நாம் பதிவு  செய்திருக்கலாம். ராமதாஸ், பாரதிராஜா செய்தார்கள் என்பதற்காக இப்போது நாம் செய்ததும் நியாயம் ஆகாது! படத்திற்கு எதிராக ஆர்பாட்டம் நிகழ்த்தி இருக்கலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும். சிறு அறிக்கைகள் (மேற்கொண்ட நியாங்களை விளக்குவதாக), துண்டு பிரசுரங்கள் விநியோகித்து இருக்கலாம். இதுதான் ஜனநாயகத்தின் வழி. இவ்வகையான அனைத்து போராட்டங்களுக்கும் நாம் மாதிரியாக இருந்து இருக்கலாம். தனிமை படுத்தி கொண்டு போராட வேண்டிய துர்பாக்கிய நிலை இன்னமும் இந்த நாட்டில் எந்த இனத்திற்கும் ஏற்படவில்லை. உங்கள் போராட்டம் இவ்வகையில் இருந்தால்..நடுநிலையாளர்களின் ஆதரவை எளிதாக பெற்று இருக்கலாம். கூடங்குளம் போராட்டம் போல் நீங்கள் தனித்து விடபட்டிருந்தாலும்..எதிர்காலத்தில்ஒரு சிறு தயக்கத்தையும், குற்றவுணர்வையும் படைப்பாளிகளிடம் நாம் ஏற்படுத்தி இருக்கலாம். இப்போதும் அந்த தயக்கம் ஏற்பட்டு இருக்கிறது..ஆனால் இது எதிர்மறையானது. தீண்டதாகதவர்கள் போல் ஆக்க பட்டு இருக்கிறோம். எதுக்கு  வம்பு என்றே ஒதுங்கி இருப்பார்களே தவிர உங்களை புரிந்து கொண்டு அல்ல. அவர்களின் முறைக்காக கறுவி கொண்டு இருப்பார்களே தவிர..உங்கள் நியாயத்திற்கு செவி சாய்த்து அல்ல!. நாம் பொறுமையுடன் இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து! 

இது என்னை வேறு ஒருவனாக கற்பனை செய்து கொண்டு இஸ்லாமிய சமூகத்தை நோக்கி கூறும் அறிவுரை அல்ல. சக மனிதர்களுக்கு அவர்களின் ஒருவனாக, சகோதரனாக இருக்க விரும்பும் நேசத்துடன் சொல்வது!

Thursday, 15 December 2011

மனம் எனும் கடவுள்!

மனம் எனும் கடவுள்!

நான் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது நடந்த நிகழ்வு இது. உடன் பணி புரியும் ஆசிரியையுடன் உணவு இடைவேளையில் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு சுற்றி வளைத்து துறை பேராசிரியை பற்றி வந்தது. எங்கள் அனைவருக்கும் அவரை பற்றிதெரியும். இருந்தாலும் எப்போதும் அவரை பற்றி பேச நிறைய இருந்தது, குறிப்பாக எங்களை போல் இளநிலை ஆசிரியர்களுடன்..
"அவங்க எப்போ எதை செஞ்சாலும் குற்றம் கண்டுபுடிச்சு திட்றாங்க சார்!. சில நேரத்தில் வாழ்கையே வெறுத்து போயிடுது ஒரு.." என்றார் சக ஆசிரியை சோகமாக..
"விடுங்க! அவுங்க திட்டுவதால் நமக்கு என்ன காதா வலிக்க போகுது..! நீங்க பாட்டுக்கு உங்க வேலையை பாருங்க" என்றேன்.
"திட்டினா காது வலிக்காது சார்..ஆனா மனசு வலிக்கும்" உண்மையிலேயே கண் கலங்கி சொன்னார்.
சிறிது நேரம் யோசித்துவிட்டு உண்மையை சொன்னேன்..
"யு நோ ஒன் திங்..? மனசுன்னு ஒன்னு டஸ் நாட் எக்ஸ்சிஸ்ட்! அப்படி ஒன்னு இல்லவே இல்லை..நாமதான் அப்படி ஒன்னு இருக்கிறதாவும் அது வருத்தம், சந்தோஷம் எல்லாம் பட்டுக்கிறதாவும் கற்பனை பண்ணிக்கிறோம்.."
ஒன்றும் பேசாமல் சாப்பிட்டு விட்டு கிளம்பினார். அதன் பிறகு நான் அங்கு பணிபுரிந்த மூன்று வருடங்களும் அவர் என்னிடம் மிகக்குறைவாகவே பேசினார், அதுவும் தேவை ஏற்பட்டால் மட்டுமே..!

இந்த நிகழ்வை நான் சொல்வதற்கு காரணம், மேற்கொண்டு படித்தால் நீங்களும் அந்த நிலைக்கு ஆளாகலாம் என்று எச்சரிக்கை செய்யவே!! :)
 *********

மனம் என்பது என்ன? மனம் என்று ஒன்று இருப்பதை எப்போது நாம் உணர்கிறோம்? இந்த கேள்விகளை நீங்கள் உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.

நம்மில் பெரும்பாலானோர் மனதை, அதன் இருப்பை உணர்வது சோகத்தின் போதுதான். மிகமிக சில சந்தர்பங்களில் மகிழ்ச்சியின் போது..! மற்ற நேரங்களில் மனம் பற்றிய பிரக்ஞை நமக்கு இருப்பதில்லை. உதாரணமாக நீங்கள் உங்கள் மென்பொருள் எழுதும்போது, அல்லது மின்னழுத்தம் பற்றி படிக்கும்போது, இந்த கட்டுரையை படித்து கொண்டிருக்கும்போது...இந்த எல்லா தருணங்களிலும் நீங்கள் உங்கள் மூளையை மட்டுமே உணர முடியும் மனதை அல்ல.
அதே நேரம் திரைப்படத்தில் சோக காட்சியை பார்க்கும்போது, தனிப்பட்ட சோகத்தின் போது, மகிழ்ச்சியின் போது மட்டுமே மனதின் இருப்பை உணர முடியும். மற்ற நேரங்களில் இந்த மனது எங்கு போய் ஒளிந்து கொள்கிறது?..

அதே போல் உங்களிடம் உங்கள் மனது எங்கிருக்கிறது என்று கேட்டவுடன் உங்களுக்கு தோன்றுவது இதய பகுதிதான்..இல்லையா?? ஏன் அப்படி தோன்றுகிறது?

ஒரு சில நிகழ்வுகளின் போது நம் வருத்தபடுவது ஏன்? ஒரு சில நிகழ்வுகள் ஏன் நம் மனதை  மகிழ்ச்சி படுத்துகின்றன?..ஒருவரின் வசைச்சொல் ஏன் நம்மை காயபடுத்துகிறது? வாழ்த்துக்கள் ஏன் நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கின்றது?
வார்த்தைகள் என்பது ஒலிகள் மட்டுமே..இல்லையா? அது எப்படி நம்மை காயபடுத்த அல்லது மகிழ்ச்சி படுத்த முடியும்? 

இதை பற்றி நாம் சிந்தித்திருகிறோமா? மனதால் அல்ல மூளையால்...!

உண்மையிலேயே மனம் என்ற ஒன்று இல்லை. அது உருவாக்கப் படுவது. அப்படியானால் உருவாகிறதா?? அதுவும் இல்லை. உருவாகியதாக நம் மூளை பயிற்றுவிக்க படுகிறது!.
உடலினால் உணரப்படும் வலிகளும், மகிழ்ச்சிகளும் மட்டுமே உண்மையான வலிகளும் மகிழ்ச்சிகளும். மற்ற யாவையும் உருவாக்க படுபவை. உடலினால் ஏற்படும் வலிகளில் காயங்கள், உடல் உபாதைகள், உடல் நலமின்மை இவைகள் அடங்கும். உடல் ரீதியான மகிழ்ச்சியில் முக்கியமானது காமம்.

இதை தவிர மரணத்தால்,  பிரிவினால், ஒருவரின் வசை சொல்லினால், இன்ன பிற மனம் சார்ந்த காயங்களால் உண்மையில் நாம் எந்த பாதிப்பிற்கும் ஆளாவதில்லை. அதே போல , பிணைப்பினால், பிறப்பினால், புது பந்தத்தால் நாம் உண்மையில் எந்த மகிழ்ச்சிக்கும் ஆளாவதில்லை. இருந்தும் ஏன் இவ்வகையான நிகழ்வுகள் நமக்கு சோகத்தை, மகிழ்ச்சியை கொடுக்கிறது.

உண்மையில் நாம் இந்த நிகழ்வுகளின் போது மகிழ, அல்லது வருந்த சிறு வயதில் இருந்து பயிற்றுவிக்க படுகிறோம். அதிர்ச்சியாக இருந்தாலும் இது உண்மை.

மிக நல்ல உதாரணம் கீழ் உள்ள நிகழ்வு.

என்றாவது நீங்கள் உங்களுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒருவரின் மரண சடங்கிற்கு சென்றதுண்டா?. அந்த நேரத்தில் நீங்கள் இதை நன்றாக உணர முடியும். அந்த நேரத்தில் தனிப்பட்ட முறையில் நாம் எந்த வருத்ததிற்க்கும் ஆளாவதில்லை. ஆனாலும் சோகமாக இருக்கவேண்டிய சூழ்நிலை..ஆகவே சோகமாக இருப்பது போல் நடிக்க வேண்டிய கட்டாயம். வலுக்கட்டாயாமாக சோகமாக்கி கொள்வோம். அதாவது சூழ்நிலைக்காக நாம் சோகப்படுவோம்.
அப்படித்தான் நமக்கு உண்டாகும் இழப்புகளின் போதும் நாம் சோகமாக நடிக்கிறோம் (நமக்கே தெரியாமல்)..!
இவ்வாறு நம்மை எப்படி, யார் நடிக்க பழக்குகிறார்கள்? இதற்குத்தான் மனம் என்ற ஒன்று நாம் பிறந்தது முதல் கட்டமைக்க படுகிறது..!

பிறந்த குழந்தைக்கு மனம் என்ற ஒன்று இருப்பதில்லை. பசிக்கும்போதும், உடல் பிணியின்போது மட்டுமே அது அழுகிறது, வருத்தபடுகிறது. அதற்கு நாம் பேச சொல்லிகொடுக்கும்போது கூடவே மனம் என்று சொல்லப்படுவதை குழந்தையை சுற்றி எழுப்புகிறோம். பேச ஆரம்பித்த குழந்தைகள் கூட நாம் துக்கமாக இருக்கும் தருணத்தில் (மரண வீட்டில்) வருத்தமாக இருப்பதில்லை.. ஆனால் நாம் அப்படி இருக்க கூடாது என்று அறிவுறுத்துகிறோம்..மெல்ல மெல்ல மனதை..அதன் மூலம் மகிழ்ச்சி, சோகம் போன்ற உடல் சாராத உணர்வுகளை அறிமுக படுத்துகிறோம். மனம் கட்டமைக்க படுகிறது.

மெல்ல மெல்ல இப்படி கட்டமைக்க பட்ட மனது பிறகு மெதுவாக நம்மை கட்டுப்படுத்த துவங்குகிறது..நாம் அறியாமேலேயே. அதன் பிறகு நாம் அதிலிருந்து மீள்வதே இல்லை.

ஒரு கணினியை நம் மென்பொருள் கட்டுபடுத்துவதை போல இத்தகைய கட்டுமானங்கள் நம்மை கட்டுபடுத்துகின்றன. இந்த வார்த்தைகளை கேட்டால், இந்த நிகழ்வுகளை பார்த்தால், இந்த நிகழ்ச்சிகள் நடந்தால் à வருத்தபடு இல்லையேல் மகிழ். IF loop – போலத்தான் J.

இதெல்லாம் தெரிந்து என்ன செய்ய போகிறேன் என்கிறீர்களா?.. ஒன்றும் இல்லை நான் இப்போது இருப்பதை போல் இருக்கலாம்....!!! J

-- தொடரலாம்!!

Thursday, 10 November 2011

அறிவு!

சென்ற வாரம் போதிதர்மரை..மன்னிக்கவும் ஏழாம் அறிவு படம் பார்த்தேன்.
முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்கு படம் பிடித்திருந்தது. வியாபார
குப்பையும் அல்ல, மிகத்தரமான படமும் அல்ல. இரண்டுக்கும் நடுவில் மனம்
திறந்து பாராட்டவும் முடியாமல், அவர்களின் உழைப்பால் திட்டவும் முடியாத படம்.
படத்தை பற்றி எனக்கு தோன்றியதை எழுதலாம் என்று முடிவு செய்து என்
மனைவியிடம் அதை சொல்லியும் பார்த்துவிட்டேன். முருகதாஸ், சூர்யா, உதயநிதி
ஆகியோருக்கு தெரியாமல் எழுதும்படி அறிவுறித்தினாள். (என்ன ஒரு
நம்பிக்கை??..நம்ம தளத்தை நானே ரெண்டு தடவைக்கு மேல் படிப்பது இல்லை
என்ற உண்மையை சொல்லாமல் விட்டு விட்டேன். அப்படியே இருப்பது நல்லது
என்று நினைக்கிறேன்..."அவர் ஏதோ இலக்கியம், விமர்சனம்னு எழுதுறாருப்பா..!"
என்று கூறினால் அடுத்த தீபாவளிக்கு மோதிரம் கிடைக்கும் என்று நினைப்பு..!).
ஆகவே சூரியா, முருகதாஸ், உதயநிதி அவர்களே மேற்கொண்டு படிக்காமல்
இருப்பது நீங்கள் அடுத்தடுத்த படங்கள் எடுக்கவும், நான் என்னை காப்பாற்றி
கொள்ளவும் உதவும் .!. என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள், அந்த படம் பார்த்து
தமிழுணர்வில் புல்லரித்து போய் இருந்தால், தயவு செய்து நீங்களும் படிக்க
வேண்டாம். நட்பு கெடும்..!


முதல் இருபது நிமிடங்கள்தான் படத்தின் முக்கிய கரு. ஏனென்றால் அதில்தான்
எனக்கு நிறைய புரியவில்லை. பாரதி என்னிடத்தில், "ம்ம்.. சைனீஸ் படத்துக்கு
ஏன்பா கூட்டிட்டு வந்தே?" என்றாள். நான் சப் டைட்டில் வைத்து சமாளித்தேன்..
ஆனால் போதி தர்மர் எதை வைத்து சமாளித்து இருப்பார் என்று எனக்கு இன்னும்
புரியவில்லை.. ஒரு வேளை, ஞான திருஷ்டியில் சப் டைட்டில் தெரிந்திருக்குமோ?..
அதை பற்றி உனக்கு என்ன கவலை என்று கேட்கும்படியாக மீதி படம் இருந்தது.



போதி தர்மர் என்பவர் ஒரு பல்லவ அரசரின் மகன். காஞ்சிபுரம்தான் அவர்
பிறப்பிடம்.  திடீரென்று அவருக்கு ஆன்ம ஞானம் ஏற்பட்டது. மக்களுக்கு அதை
போதிக்க முயற்சித்தார்.(அவர் பெயரின் முதல் பாதி புரிகிறதா?). அவர் தமிழில்
பேசியதாலும் அது புரியும்படியாக இருந்ததாலும் நம் மக்கள் அவரை ஞானியாக
ஏற்று கொள்ள வில்லை. கொடுக்க வேண்டியதை கொடுத்து (அவர் பெயரின்
இரண்டாவது பாதிக்கும் அர்த்தம புரிந்ததா?) அனுப்பி வைத்தனர். அவர் தான்
பேசுவது முற்றிலும் புரியாத ஊருக்கு பயணப்பட்டார். தமிழில் இருந்த சமஸ்க்ரித
கலப்பால் இந்தியாவில் இருந்த அனைவருக்கும் அவர் பேசியது கொஞ்சமாவது
புரிந்துவிட்டது. ஆகவே அவர் அதையும் தாண்டி பயணப்பட்டார். சீனாவை
அடைந்தார். அங்கு அவருக்கு வேறு பிரச்சனை!


மூக்கு சிறிதாயினும், சீக்கு பெரிதாக பரவியிருந்தது சீனர்களிடம். போதி தர்மர் தன்
திறமையான வைத்திய முறைகள் மூலம் அவர்களை குணப்படுத்தினார்.அவர் தன்
பெயரை எப்படி உச்சரித்தும் சீனர்களின் வாயில் நுழையாமல் அவர்கள் அவரை
'தாமு' என்றே அழைத்தனர். (தாமு என்றால் கூடவே சார்லியும் இருக்க வேண்டும்
என்ற நியதியின் காரணமாக சார்லியை நாடு முழுவதும் தேடி, பிறகு ஜெர்மனியில்
சார்லி சாப்ப்ளினாக கிட்டத்தட்ட பல நூற்றாண்டுகள் கழித்து கண்டுபிடித்த கதையை
எட்டாம் அறிவில் முருகதாசே எடுப்பதாக ஒரு உபதகவலும் உண்டு. சார்லியாக
விஜய் நடிக்க கூடும் என்று நான் எச்சரிக்கிறேன்).


அதன் பிறகு தாமு மக்களுக்கு ஒரு சில கலைகளை பயிற்றுவித்தார். நிறைய
சீனர்களை அடித்து உதைத்தார். உதைத்தது போதும் என்று தோன்றியதும் அதன்
எதிர்பதத்தை நினைத்து இந்தியா திரும்ப எத்தனித்தார். சீனர்கள் அவர் உடல்
இங்கிருந்தால் எந்த நோய் கிருமியும் நெருங்காது என்ற நம்பிக்கையில் அவரை
விஷம் வைத்து கொள்கிறார்கள். நிற்க!!!



யோசிக்க ஒன்றும் இல்லை. அந்த படத்தில் இருந்தவற்றை அப்படியே
தந்திருக்கிறேன்...விடுபட்ட இடங்களை மட்டும் என் கற்பனையால் நிரப்பி!!

முதல் இருபது நிமிடங்களில் இவை அனைத்தும் முடிந்து தமிழ் படம்
ஆரம்பித்தது.மீதி கதை இதோ!!



போதி தர்மரின் பல பிறவிகளுக்கு பிறகு, ஒரு சர்க்கஸ் கலைஞனாக (இன்னொரு
சூர்யா) பிறக்கிறார். ஆனால் அவருக்கு அந்த பழைய ஜென்ம ஞாபகம் எதுவும்
இல்லை. அதே நேரத்தில் சீனா ஒரு உயிரியல் ஆயுதத்தை சென்னைக்கு ஒரு
வில்லன் மூலம் அனுப்பி வைக்கிறது. இது தெரிந்த ஸ்ருதி வில்லனை அனுப்ப
முயற்சிக்காமல் பேசியே நம்மை அரங்கத்தை விட்டு அனுப்ப பார்கிறார். நடுவில்
அவர் ஆராய்ச்சியை ஆசிரியர் அங்கீகரிக்காததால் அவரை கெட்ட வார்த்தையில்
திட்டுகிறார். மேலும் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு காரணம் இரண்டு
என்பதை தன் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து நமக்கும் சொல்கிறார். ஒன்று
ஊழலாம். இன்னொன்று நான் எதிர்பாராதது..அது இட ஒதுக்கீடாம். நானும்
யோசிக்காமல் விட்டு விட்டேன் இதுவரை. இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால்
நாம் என்றோ தமிழ் படித்து, வளர்ந்து வல்லரசாகி இருப்போம். இந்த இட ஒதுக்கீடு
இருந்ததால் நம்மால் அப்படி முன்னரே முடியவில்லை. கொள்ளை பயலுக இந்த இட
ஒதுக்கீட்டால் படித்து விட்டு வந்து இந்தியாவை பின்நோக்கி தள்ளுகிறார்கள். அது
எப்படி அவர்கள் படிக்கலாம். இட ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்கள் நல்ல
நிலையில் பிற நல்ல தொழில்களை செய்து கொண்டு இருந்திர்ப்பார்கள்.
இந்தியாவும் முன்னேறி இருக்கும். அவர்கள் படிக்க வந்ததால்தான் எல்லா
பிரச்னையும்...!! போதும் என்று நினைக்கிறேன்.மீண்டும் கதைக்கு செல்வோம்!!



சுருதி ஒரு அற்புதமான மருந்தை கண்டுபிடித்து அதை பல்வேறு குழாய்கள் வழியே
சூர்யாவுக்கு செலுத்தி, அவரை ஒரு தொட்டியில் ஊறப்போட்டு பூர்வ ஜென்ம
ஞாபகத்தை உருவாக்குகிறார். சூர்யாவுக்கு ஞாபகம் வந்து, அவருக்கு விஷம் வைத்த
சீனர்களின் பிரதி நிதியை போட்டு தாக்கி கொல்கிறார். அதே ஞாபகத்தில் இலை
தளைகள் வைத்து அந்த உயிரியல் ஆயுத கிருமியை அழிக்கிறார். கூடவே தமிழனை
மறதிக்காக திட்டுகிறார். அவ்வளவுதான்!


சுபம்!!


என்ன இரண்டாவது பாதியில் வரும் முன் ஜென்ம விசயங்களை நம்ப
முடியவில்லையா?.. ஒன்றும் பாதிப்பில்லை, தேடி மாற்று (find & replace) வசதி
மூலம் முன் ஜென்மத்தை ஜீன்கள் அல்லது பரம்பரை என்று மாற்றிக்கொண்டால்
போதும்..முழு கதையும் உங்களுக்கு தெரிந்துவிடும்.


படம் பார்த்து அறிவை ஏழாக்கி கொள்ளவும்!!


இவண்,
காளிராஜ்